சென்னை: தமிழக தலைமை செயலாளராக இருந்து ராம மோகன ராவின் வீடு மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்களும், பல லட்சம் மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டன, இதனால் அந்தப் பதவியில் இருந்து ராம மோகனராவ் நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஜா வைத்தியநாதனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அவர் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் 45-வது தலைமை செயலாளராக பதவி ஏற்றுள்ள இவர், 4-வது பெண் தலைமை செயலாளராவார்.
கிரிஜா வைத்தியநாதன் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
1983-ம் ஆண்டு திருவள்ளூர் சப்-கலெக்டராகவும், 9.1.92-ல் மதுரை மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியவர்.
கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கட்ராமன், இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர்.
நடிகரும், பா.ஜ.க. கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.