நாகர்கோவில்:தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் அதிகரித்து உள்ளது. 2 பதவியை காப்பாற்றிக் கொள்வதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குறியாக உள்ளனர். முதல்வர் பதவி யாருக்கு? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று அவர்கள் போட்டி போடுவதால் இரண்டாக உடைந்த அ.தி.மு.க. இனி இணையாது. இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. இதனால் அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது.
தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். ராம மோகனராவ் வீட்டில் நடந்த சோதனை. கொடநாடு காவலாளி கொலை, கார் டிரைவர் சாவு போன்றவற்றில் மர்மம் உள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதியில் அரை மணி நேரம் தியானம் செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஞானம் பிறந்து உள்ளது. 75 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு ஞானம் வரவில்லை. முதல்வர் பதவி பறிபோன பிறகு தான் ஞானம் பிறந்துள்ளது.
மத்திய அரசை குறை கூறாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தைரியம் அற்ற அரசு தற்போது பதவியில் உள்ளது.
தற்போதைய ஆட்சி விரைவில் கவிழ்வது உறுதி. தமிழகத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி வரும். பொதுத் தேர்தலும் நடைபெறும். அடுத்த மாதம் (ஜூன்) ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு தினமும் முக்கிய செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.