சியோல்:தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகி வந்தன. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அதிபருடனான தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.
இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.
தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் சுமார் 13 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், அந்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிபரான பார்க் கியுன் ஹே நிரந்தரமாக பதவியை இழந்துள்ளார். அந்நாட்டில் அதிபர் ஒருவரின் பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே, அந்நாட்டு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.