சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 74 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. பொது மக்களின் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது.
பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
முதல்வரின் மறைவை அடுத்து தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.